August 27, 2016

பைத்திய ருசி

பைத்திய ருசி
1
காலையிலிருந்தே கதிரின் மீதான ஏவல் தொடங்க ஆரம்பித்துவிடுகிறது கல்யாணியின் அப்பா வீட்டில் காபி குடிக்கமாலே எனக்கு. எனக்கும் சில நேரங்களில் கோபம் வரத்தான் செய்கிறது ஏன் இந்த கதிர் திரும்ப திரும்ப என்னோடு பேசிக் கொண்டே இருக்கிறான் என்று. கதிருக்கும் என் வாழ்க்கைக்கும் சம்பந்தமான சம்பவங்கள் என்று அப்படி ஒன்றும் நிகழ்ந்திடாத போதும் கற்றுக் கொண்ட மாயைகளை போல என்னால் கதிரிடம் இருந்து விலகவே முடியவில்லை..
தூக்கம் வந்தும் தூங்க முடியாத கதிர், நான் தூங்காத பல இரவுகளில் ஏவல் நிறைந்த வார்த்தைகளோடு பேசிக்கொண்டே இருக்கிறான். காதுகளை மூடிய அவன் கொடிய சத்தம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது..

2

பின்னிரவுக்கு பிறகான நேரங்களில் வில்சனின் பிரிவு சந்திரனாய் என்னுள் கரைந்து எரிகிறது சக கைதியின் மூச்சுக் காற்றில். முறைப்படி திருமணம் செய்த பானுமதியின் சிவந்த கண்களில் இருந்தும், வார்த்தைகளின் வாதங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள சோடியம் ஃவேபர் வெளிச்சம் நிறைந்த தெருவும் எனக்குத் தேவைப்படுகிறது. ஆசுவாசமாய் அழுது கொள்ள வில்சனின் சிகரெட் வாசனை நிறைந்த மெளன முத்தங்களும் நள்ளிரவுக்கு பிறகு தேவைப்படுகிறது. தேவைக்கு அதிகமான ஞாபங்களை மட்டுமே கொடுத்த வில்சனின் தேவை இப்பொழுது அதிகமாய் எனக்கு தேவைப்படுகிறது சந்திரனைவிட..


3

பதட்டமடைந்த தயாளனின் படபடப்பு. என் இரவின் அருகாமையில் வீசும் தயாளனின் மன வெளிச்சங்கள் என எல்லாவுமே என்னை உறங்கவிடாமல் இருக்கச் செய்கிறது. மெளனத்தின் எல்லைகளை கடந்து மனைவி மீதான அழுத்தங்கள், வெள்ளை நோயின் வெறுப்புகள் என வெறுமையில் ஆழ்த்துகிறது.
என் எல்லா பயணங்களின் தொடக்கம் சந்தோசமாக இருந்த போதும் பயணங்களின் ஊடே பயணிக்கும் தயாளனின் முத்தத்தின் சூடு என் நெற்றியிலும் படர்கிறது.
பயணத்தின் நடுவே பஸ்லில் இருந்து கீழே இறங்கிய தயாளனை ஏனோ மனதிலிருந்து இறக்கிவிட முடியாத போது காமத்தின் நிறம் வெள்ளையாகவே தெரிகிறது..

4
ஜென்மத்தில் தீராத பசி,
பைத்தியங்களோடு பைத்தியமாய் 
என்னைக் கழுவிக் கொண்ட 
ஒரு நதி,
இமை திறந்து உறங்கப் 
பழகி கொண்ட எல்லா நாட்களும்,
இப்படி ஒரு கடிதம் 
எழுத நேரிடும் ஓர் இரவு,
நரம்பிற்கு பதிலாய் 
கனவுகளை அறுத்து
கண்ணீர் விடும் கண்கள்,
இறகுகளின் சடலங்கள்,
பிரிவிலிருந்து என்னை
எண்ணிலிருந்து மீட்டெடுத்து
மீண்டும் பிணமான நொடிகள்,
காமத்தின் 
வெளிப்படையான காடு
நித்தம் கண்கள்
சந்திக்கும் சில துரோகங்கள்
அனைத்தும்
உதவுகிறது பைத்தியம் ஆவதற்கு.

எண்ணிப் போட்டால் 
சாகமுடியாது தான்
நான் பைத்திய ருசியை
மீண்டும் வாசிப்பதற்காகவே
வாழ விரும்புகிறேன்.

-SunMuga-
27-08-2016

No comments:

Post a Comment