May 20, 2015

2015 கவிதைகள் 811 to 820

உன்னைப் பார்க்க
எனக்கு இத்தனை
யோசனையா?
இல்லை
உறவுகளை கடந்து
உன்னைப் பார்க்கவே
இத்தனை யோசனை
எனக்கு!!                 811

தேவைப்படும் நேரத்தில்
அல்லது
குறித்த நேரத்தில்
நான் எப்போதும்
உனக்கு தேவையாக
இருப்பதில்லை....    812

பிரபஞ்ச இசைகளை
நான் கேட்கும் போது
அதன் பிரதிபலிப்பாக
உன் சிரிப்புகளும்
உன் அழுகைகளுமே
எனக்கு இசைக்கிறது..    813

உன் அழுகைக்கு பின்
ஆறுதலாக கூட
என் கரங்களை பற்றிக்
கொள்ள
காலம் அனுமதிப்பதில்லை.. 814

உன்னைப் பற்றி
சிந்திக்கும் போது
நம் மறு சந்திப்பின்
இடங்களும்
நிகழ்வுகளும்
அப்படியே தெரிகிறது
ஆனால் அது எதுவுமே
நடப்பதில்லை என்பதே
உண்மை....                815

என்னுள் நீ
அழும் போதும்
சிரிக்கும் போதும்
ஏதோவொரு கவிதை
வந்துவிடுகிறது
அழுகையின் வழியோ!
சிரிப்பின் வழியோ!!        816

முன் இரவில்
உன்னால் கடத்தப்பட்ட
என் காதல் வார்த்தைகள்
இப்பொழுது
உன்னிலிருந்து
மெளனமாக உதிர்கிறது
நம் கண்களின் சந்திப்பில்..  817

பல மனிதர்களை
கடந்து வந்த பிறகும்
பலமாய்
உன் ஞாபகம்
என்னோடு நடந்து வருகிறது
என் சின்ன சின்ன
துன்பங்களை
தூக்கி எறிந்த படி..    818

ஒரு நிமிடம்
உன் கண்களைப் பார்த்து
மறுநிமிடம்
உன் கரத்தை தீண்டி
நானும் உன்னோடே
இவ்வுலகை சுற்றி வர வேண்டும்...      819

தீபம் ஏற்றி
என் கண்ணில்
படரும் வெளிச்சம் நீ!!   820

No comments:

Post a Comment